• அரியலூர் – பெரம்பலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கக்கோரி ரயில்வே வாரியத் தலைவர் திரு. வி.கே.யாதவ் அவர்களிடம் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நேரில் வலியுறுத்தினார்

    “மத்திய ரயில்வே வாரியத் தலைவர் திரு.வி.கே.யாதவ் அவர்களை. அவரின் டெல்லி அலுவலகத்தில் திரு.பாரிவேந்தர் எம்.பி, அவர்கள் நேற்று (04.03.2020) நேரில் சந்தித்தார். அப்பொழுது அவர் அளித்த கோரிக்கை மனுவின் விவரம் வருமாறு:

    அதிகம் முன்னேறாத பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இதன் காரணமாய், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது வெறும் கனவாக மட்டுமே உள்ளது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்துள்ளது. 70 சதவிகித மக்கள் விவசாயிகளாகவும் அல்லது விவசாயக் கூலிகளாகவுமே உள்ளனர்.

    இந்நிலையில், அவர்களின் நிலத்தில் விளைந்த விளைபொருட்களை நகரப் பகுதிகளுக்கு எடுத்துச்சென்று சந்தைப்படுத்த ரயில் வசதி இல்லை.  இதனால் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் வழியாக நாமக்கல் வரையிலான  108 கிலோமீட்டர் துரத்திற்கு புதிய ரயில்வே வழித்தடத்தினை அமைக்கவேண்டும்.

    மேலும், குருவாயூர், மங்களூர் விரைவு ரயில்கள் லால்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேணடும். மேற்கூறிய திட்டங்கள் குறித்து 11.07.2019 அன்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் உயர்திரு. பியூஸ்கோயல் அவர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் – தொழிலாளர்கள் – மாணவர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு, மேற்கூறிய திட்டங்களை விரைந்து நிறைவேற்ற ஆவணசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என டாக்டர் பாரிவேந்தர் எம்.பி அவர்கள் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.