• மிகப்பெரும் ஜனநாயக சக்தியாக விளங்கும் இந்தியா உலக நாடுகளுக்கோர் முன்னுதாரணமாக விளங்குகின்றது - டாக்டர் பாரிவேந்தர் சுதந்திர தின வாழ்த்து -

     71 ஆண்டுகளுக்கு முன், உலக வரலாறு அதுவரை கண்டிராத ஒரு அதிசயத்தைக் கண்டது. முடிசூடிய மன்னர்களையும், அவர்கள் தம் படைபலத்தையும், ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்துவதே போர்முறை என அறிந்து வந்த உலகில், தம்மை அடிமைப்படுத்திய வல்லாதிக்க நாட்டினையும், அகிம்சை எனும் அர்ப்பணிப்பு ஆயுதம் மூலம் வீழ்த்திக்காட்டிய விந்தையை உலகம் கண்டது. அண்ணல் காந்தியடிகளின் தலைமையில் இந்திய தேசமே ஒன்றிணைந்து, ஆங்கில வல்லாதிக்கத்தை எதிர்த்து நின்றது.

    இந்திய மக்களின் சுதந்திர போர்முறைக்கு முற்றிலும் அடிபணிந்த ஆங்கிலேய அரசு, நமக்கு பரிபூரண விடுதலையளித்தது. நம்மை நாமே ஆண்டுகொள்ளும் மக்களாட்சி முறைக்கு, நாம் பழகியபோது, உலகம் நம்மை ஏளனமாகப் பார்த்தது. ‘இந்தியர்களுக்கு ஜனநாயகப் பயிற்சி போதாது. அவர்கள் நீண்ட நாள் ஜனநாயகப் பாதையில் பயணிக்க முடியாது என்று நம்மை பரிகசித்தார்கள்.

    அவர்களின் வெற்று விமர்சனங்களைப் பொய்யாக்கி, மக்களாட்சி மாண்புகளைக் காத்து நின்று, மிகப்பெரும் ஜனநயாக சக்தியாக விளங்கும் இந்தியா, உலக நாடுகளுக்கோர் முன்னுதாரணமாய் விளங்குகின்றது. நமது தேசத் தலைவர்கள் நமக்களித்த மக்களாட்சி எனும் மகத்தான கொடையை, சிறிதும் சேதாரம் இல்லாமல் கட்டிக்காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு எனக்கூறி, நம் இந்திய தேசத்தவர்கள் அனைவருக்கும்  சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.