• நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் மறைவிற்கு - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் இரங்கல் -

    உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் – சமூக ஆர்வலருமான நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் அவர்கள் இன்று (28.02.2018) இயற்கை எய்தினார் என்கின்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

     

    திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக தன் பணியினைத் தொடங்கி 1971-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்வடைந்தார். மனுநீதிச்சோழனின் சிலையை வடித்து அதில் “சமநீதிச்சோழன் என பெயர்பொறித்து,  சென்னை உயர்நீதிமன்றத்தின் முகப்பில் வைப்பதற்கு முன்நின்று பணியாற்றினார்.

     

    மேலும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்பினை முன்னேற்றும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசு பணியிடங்களில் இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் “பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார்.

     

     முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா – கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் அரசியல் ரீதியான நட்புணர்வுடன் விளங்கிய நீதியரசர் திரு.ரத்னவேல் பாண்டியன் அவர்கள், துணிவும் – உறுதிப்பாடும் மிக்க தீர்ப்புகளை வழங்கி இளநிலை வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். அவரின் மறைவால் வருத்தமுற்றிருக்கும் அண்ணாரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.